அவுஸ்திரேலியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அந்நாட்டின் அணுசக்தி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
புதிய மருந்து உற்பத்திக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் பிரிவை நேற்று ஜனாதிபதி பார்வையிட்டார்.
தைரொயிட் மற்றும் ஈரல் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முறை பற்றி இந்நிறுவனத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக அணுசக்தியை உபயோகித்து மருந்துகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஜனாதிபதிக்கு நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பீற்றர்சன் நிலத்தடி நீரில் அடங்கியுள்ள தீங்குபயக்கக்கூடிய உலோகங்களை இணங் காண்பதற்கும் இந்த அணுசக்தி தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடியுமென தெரிவித்தார்.
இலங்கையில் காணப்படும் சிறுநீரக நோய் நிவாரணம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இணங்கிய இந்நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஜனாதிபதி; விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா, அஜித் பீ. பெரேரா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் உள்ளிட்டோர் இவ் அவதானிப்பு விஜயத்தில் கலந்துகொண்டனர்.