மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மலசல குழியருகே இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்று (30) பிற்பகல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த பிரபல ஹோட்டலொன்றில் இவை மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலினடிப்படையில் அப்பிரபல ஹோட்டலுக்குச் சென்ற புளியந்தீவு பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர் அங்கிருந்த பாவனைக்குதவாத உணவு வகைகளைக் கைப்பற்றியுள்ளனர். இதன் போது மலசல கூடத்திற்குள் இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையிலும், ஒரு தொகை இறைச்சிகளையும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.
இதன் போது, பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டதாகவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். அத்துடன், அங்கிருந்த அநேக உணவு தயாரிப்பவர்கள் சுகாதாரத்திற்கேற்ற முறையில் இருக்கவில்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றி வளைப்பின் போது பிரபல ஹோட்டல் உரிமையாளர் நோன்பிருந்துள்ளார். இதனால் சற்று கோபமடைந்த இவ்வாறு சுகாதாரமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற நீங்கள் (உரிமையாளர்) நோன்பினை விட்டு விட வேண்டுமென அவ்விடத்திலிருந்து கேட்டுக்கொண்டதனைக் காண முடிந்தது.
மேலும், மலசலகூடத்துக்குள் வைத்து இறைச்சி வெட்டியமை உணவுப்பண்டங்களைத் தயாரிப்பதற்குப் பொருத்தமற்ற உடல் நலத்துடன் காணப்பட்டமை போன்றவை தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஹோட்டல் உடனடியாக சீல் வைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. நோன்பு காலத்தில் கூட இவ்வாறாக சுகாதாரமற்ற முறையில் ஹோட்டல்கள் இயங்குவது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







