றியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்ட இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியுற்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த முதலாவது வீராங்கனையாக தனது பெயரைப் பதிவு செய்து கொண்டதுடன், மிகவும் இள வயதில் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியராகவும் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார்.
முதலாவது சுற்றுப் போட்டியில் பின்தங்கியிருந்த சிந்து, தொடர்ச்சியாக புள்ளிகளைப் பெற்று அச்சுற்றை 21-19 என்ற ரீதியில் வென்றிருந்தபோதும் அதிரடி மீள்வருகையை நிகழ்த்திய மரின், அடுத்த இரண்டு சுற்றுக்களையும் 21-12, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.




