கதிர்காமம், மாணிக்க கங்கையில் சனிக்கிழமை(14), நீராடிக் கொண்டிருந்த நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நபர், ஞாயிற்றுக்கிழமை(15) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்புத்தளையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் இளையதம்பி (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பொலிஸாரும், பிரதேச இளைஞர்களும் மேற்கொண்ட தேடுதலின் பயனாக, மாணிக்க கங்கையின் அமுன என்ற இடத்திலிருந்து இவரது சடலம், உருக்குழைந்த நிலையில் மீட்கப்பட்டது. இதுதொடர்பில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.