அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து அப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விகாரை ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்சிகளை மேற்கொண்டபோதும், அம்பாறை கச்சேரிக்கு முன்னாலுள்ள இறக்காமத்தைச் சேர்ந்த அஸ்வா் எனும் முஸ்லிம் சகோதரரின் உணவகம் இனந்தெரியாத இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டபோதும் அம்பாறை மாவட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம். றிசான் அவர்கள் எங்கிருந்தார் என கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளரும், சமூக சேவையாளருமான எம்.ரீ. ஹைதர் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தன்னுடைய மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கெதிராக பெரும்பான்மை இனத்தவர்களால் இன ரீதியான கருத்துக்கள் விதைக்கப்பட்டபோது குரல் கொடுக்காமல் மௌனியா இருந்த அம்பாறை மாவட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். றிசான் அவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று சொல்லும் குற்றச்சாட்டினை பார்க்கும்போது மட்டமான புத்தியுள்ளவராக என்னத்தோண்றுகிறது.
தன்னுடைய மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வக்கில்லாத இவர் மட்டக்களப்பு மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை விமர்சிப்பது என்பது இவரின் அறியா மடத்தனத்தை புடம்போட்டு காட்டுகின்றது.
ஒரு தடவை மாத்திரம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வகித்த இவருக்கு தேசிய அரசியலில் அனுபமில்லாத காரணத்தினால் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றார். இவ்வாரான சிறுபிள்ளைகளின் இக்கருத்திற்கு சமூகம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழும் சமூகம் என்பதனை உணர்த்தும் ஆட்சியே கிழக்கு மாகாண ஆட்சியாகும்.
அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள தமிழ் மக்களுக்கும் தன்னாலான பல்வேறுபட்ட சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார். இதனை அம்பாறையிலுள்ள முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அறிந்திருக்கமாட்டார்.
அவற்றில் சிலவற்றை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அறிந்து கொள்வதற்காக மஞ்சந்தொடுவாய், ஆரயம்பதி, மாவிலங்கு துறை போன்ற கிராமங்களிலுள்ள வறிய தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி இருக்கின்றார். அதுபோன்று வவுனதீவிலுள்ள தமிழ் மக்கள் குடிநீர் இன்றி தவித்தபோது அவர்களுக்கான பொதுக் கிணறுகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றார். மேலும் நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஆசிரியர்களுக்கான தளபாடங்களை வழங்கி இருக்கின்றார். அதற்கும் மேலால் சென்று தனது சொந்த நிதியிலிருந்து 45000 ரூபா பெறுமதியான குடிநீர் இணைப்பினை ஆலங்குளம் தமிழ் கலவன் பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றார் இவ்வாறு பல்வேறுபட்ட சேவைகளை அடிக்கிக்கொண்டு செல்லலாம் இதில் சிலவற்றினையே முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அறிந்துகொள்வதற்காக தெரியப்படுத்தியுள்ளேன்.
இவ்வாறான தங்களின் பக்குவமற்ற அரசியலுக்காகவும், தாங்கள் வசிக்காத ஏனைய மாவட்டங்களில் என்னென்ன விடயங்கள் நடைபெறுகின்றது என்பதனை சரியாக அறியாமலும், ஆழசிந்திக்கத் தெரியாமலும் இப்படியானொருவரை திட்டியாவது பிரபல்யம் அடையலாம் என்று மனப்பால்குடிக்கும் உங்களை போன்றவர்கள் மாவட்டம் தான்டி நீங்களே இனங்களுக்கிடையில் பிவிரினை வாதத்தினை உண்டுபன்ன முயற்சிக்கின்றீர்கள் என்று உங்களைப்போன்றவர்களுக்கு எதிராகத்தான் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலில் தன்னுடைய வீட்டுப் பிரச்சினையை அறிந்துகொண்டு அதற்கான சரியான தீர்வினை பெற்றுக்கொடுத்த பின்னர் பக்கத்து வீட்டு பிரச்சினைகளை ஆராய முற்படுமாறு அம்பாறை மாவட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம். றிசான் அவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், எதிர்கால இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நீங்கள் இவ்வாறு முறையில்லாத மற்றும் தெளிவில்லாத ஒரு விடயத்தினை விமர்சிப்பது என்பது சரியான செயல் அல்ல. தேசிய இளைஞர் சேவை மன்றமானது முறையான சரியான தலைவர்களையே உருவாக்க வேண்டும் என்ற ஓர் உயிர்ப்போடு செயலாற்றுகின்றது. ஆனால் இவ்வாறான இளைஞர்களது கீழ்த்தரமான செயற்பாடுகளினால் முழு இளைஞர்களுக்கும் ஒரு கெட்ட பெயர் ஏற்பட காரணமாக அமைகின்றது.
தலைமைத்துதவத்தையும் சரியான அரசியலையும் வழி காட்டவே இவ்வாறான செயற்பாடுகளை அரசானது இளைஞர்கள் மத்தியில் கொண்டு வருகின்றது. இவர்களை போன்ற இளைஞர்கள் நாட்டுக்கு முட்டுக் கட்டையாகவே இருக்கின்றனர். அதன் காரணமாகவே எதையும் செய்வதற்கு முயற்சிக்காது இவரைப்போன்றவர்கள் விமர்சனத்தில் மாத்திரம் தங்களின் காலத்தை கழிக்கின்றனர் என ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளரும், சமூக சேவையாளருமான எம்.ரீ. ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.