வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைகளை மீளவும் இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் எதிர்காலத்தில் புதிய கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று அளவீட்டு அலகுள் மற்றும் சேவைகள் கூடத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் காணப்படும் கைத்தொழில் பேட்டைகளை மீள இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடமகாணத்தின் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதே நேரம் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வவுனியா மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டையை நிர்மாணிப்பதற்குரிய காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் சம்மாந்துறை கைத்தொழில் பேட்டையை இயக்குவதற்குரிய நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மீள் இயக்குவதற்கு அனைத்து செயற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இதேவேளை, திருகோணமலையில் கப்பற் கைத்தொழில் துறையை மேலும் விஸ்தரிப்பதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்று களுத்துறையிலும் புதிய கைத்தொழில் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்குரிய செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தான் ஏனைய பிரதேசங்களிலும் படிப்படியாக கைத்தொழில் பேட்டைகளை அமைத்து வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படவுள்ளன. பொது மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பதே எமது தேசிய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அதற்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் நாம் செயற்படுவோம் என்றார்.




