முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, அடிக்கடி வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதும் நாடு திரும்பும் போதும், அவர் கொண்டு செல்லும் மற்றும் கொண்டு வரும் பயணப் பொதிகள் எந்தவிதமான சோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீது கடுங்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சிவில் அமைப்பு, இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று வியாழக்கிழமை கடிதமொன்றை கையளித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதிப் பதவியை இழந்ததன் பின்னர், பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார். அவ்வாறு சென்று திரும்பும் போதெல்லாம், அவருடைய பயணப்பொதிகள் எவ்விதமான முறைகளிலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது, நிதி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இவ்வாறான வரப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளமை நாட்டுக்கு தீங்கானது என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், அந்தக் கடிதத்தின் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




