ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை ராணுவத்தின் ஒரு பகுதியினர் கவிழ்த்து நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளதற்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துருக்கி அரசை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள ராணுவம், அங்கு ராணுவ சட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளதோடு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளரான பான் கி மூன், துருக்கி மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டுமின்றி கள நிலவரத்தை உடனடியாக தெரிவிக்கும்படியும் கோரியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, துருக்கியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அரசை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் புது வெளிவிவகாரத்துறை செயலரான போரிஸ் ஜான்ஸன், துருக்கியில் நடைபெற்றுவரும் நிலவரம் கவலை கொள்ளும்படி உள்ளது எனவும், நிலைமை சீரடையும் வரை பிரித்தானிய நாட்டவர்கள் பொது இடங்களில் செல்வதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
துருக்கி முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா குல், இதுவொன்றும் லத்தீன் அமெரிக்க நாடல்ல, அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டுள்ளவர்கள் தங்களது ராணுவ குடியிருப்புகளுக்கு செல்லவும் என்றுள்ளார்.
துருக்கி முன்னாள் பிரதமர் அஹ்மத், துருக்கி ஒரு ஜனநாயக நாடு, ஆட்சியை கவிழ்க்கும் இந்த முயற்சி வெற்றிபெறும் என நான் நம்பவில்லை என்றார்.
ஜேர்மனி சான்சலர் அஞ்சலா மெர்க்கல், துருக்கியில் ஜனநாயகத்தை உடனடியாக நிலை நாட்ட ஆவன செய்ய வேண்டும், பொதுமக்களின் உயிர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் நேரக்கூடாது என தெரிவித்துள்ளார்.




