இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஹபுகஸ்தென்ன தோட்டத்தின், வேவல்கெட்டிய பிரிவில் 20குடும்பங்களும், ஹபுகஸ்தென்ன தொழிற்சாலை பிரிவில் 47குடும்பங்களும் மண்சரிவு அபாயத்திற்குட்பட்டு காணப்படுவதோடு, அவர்களுக்கு ஆவண செய்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.
குறித்த ஹபுகஸ்தென்ன, வேவல்கெட்டிய மற்றும் தொழிற்சாலை பிரிவுகளில் அமைந்துள்ள தோட்டக்குடியிருப்புக்கள் மண்சரிவு அபாயநிலை காணப்படுவதாக தேசிய கட்டிட ஆய்வ மையத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட களப்பரிசொதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக சில தோட்டக்குடியிருப்புக்கள், கட்டிடங்கள் வெடிப்புக்குள்ளானதனையடுத்து, இப்பிரதேசங்களில் வாழும் 67 குடும்பங்களைச் சேர்ந்த 306 எண்ணிக்கையானோர் வேவல்கெட்டிய தோட்ட வைத்தியசாலையிலும் ஹபுகஸ்தென்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.
அதேவேளை, இவ்விடயம் தொடர்பாக தகவலறிந்த மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் நேரடியாகச்சென்று பாதிப்புக்குள்ளான தோட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் கௌரவ இராதாகிருஷ்ணன் அவர்களையும், அமைச்சர் திகாம்பரம் அவர்களையும் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியதோடு, வெகுவிரைவில் தகுந்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் அனர்த்தத்திற்குள்ளான மக்களுடன் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தார்.
கிஷாந்தன்




