நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மலையகம் மற்றும் மட்டக்களப்பில் மரக்கறிகளின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன்படி மட்டக்களப்பில் 150 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறிமிளகாய் 1,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான உளளுர் மரக்கறிகள் 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
தம்புள்ளை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலையும் கிலோ ஒன்றிற்கு 200 முதல் 300 வரை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இம் மாவட்டத்தில் உள்ளுர் மரக்கறி உற்பத்தி செய்யப்படும் இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெருமளவு மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. இதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மறுபுறம் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக இப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மலையகத்தில் விற்கப்படும் சில மரக்கறிகளின் தற்போதைய விலை,
லீக்ஸ் ஒரு கிலோ - 160 ரூபா
பாவக்காய் ஒரு கிலோ - 200 ரூபா
வெண்டிக்காய் ஒரு கிலோ - 120 ரூபா
புடலங்காய் ஒரு கிலோ - 120 ரூபா
தக்காளி ஒரு கிலோ - 120 ரூபா
கோவா ஒரு கிலோ - 140 ரூபா
கறிமிளகாய் ஒரு கிலோ - 320 ரூபா
கத்திரிக்காய் ஒரு கிலோ விலை - 120 ரூபா
போஞ்சி ஒரு கிலோ - 240 ரூபா
பச்சை மிளகாய் ஒரு கிலோ விலை - 1000 ரூபா
கரட் ஒரு கிலோ - 180 ரூபாவிலிருந்து 200 ரூபா வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.