கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார கற்றை நெறியின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை நீக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று (20) முதல் இரண்டாம் முற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூகமளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஏ. பகீரதன் குறிப்பிட்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தின் இரண்டு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து மறுஅறிவித்தல் வரை கலை கலாசார கற்றை நெறியின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த மாணவர்கள் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்திலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், மாணவர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை கவனத்திற்கொண்டு அவர்களின் வகுப்புத் தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.
அத்துடன் விடுதிகளில் இருந்து வெளியேறியிருந்த மாணவர்களுக்கும் மீண்டும் விடுதிகளுக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார கற்கை நெறியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து, சுமார் 850 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




