குறிப்பாக, திருவிடந்தை, கோவளம், செம்மஞ்சேரி, வடநெம்மேலி, பட்டிப்புலம் ஆகிய பகுதிகளில் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் ஏராளமான சவுக்கு தோப்புகள் உள்ளன. சாலையோரம் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, காதல் ஜோடிகள் சவுக்கு தோப்பு மறைவிடங்களில் கொஞ்சி மகிழ்வது வழக்கம். நேற்று மாமல்லபுரம் டிஎஸ்பி மோகன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் பெண் போலீசார் உதவியுடன் சவுக்கு தோப்புக்குள் நுழையும் காதல் ஜோடிகளை எச்சரித்து அனுப்பினர். மேலும், மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சிற்பங்களுக்கு பின்புறம், பதுங்கி இருந்த காதல் ஜோடிகளையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். போலீஸ் கெடுபிடியால் புத்தாண்டு கொண்டாட வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
மேலும், புத்தாண்டை ஒட்டி நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பைக், கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சென்றனர்.முட்டுக்காடு படகு துறை அருகே மாமல்லபுரம் மற்றும் கேளம்பாக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஓட்டல்களில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான அனுமதி அட்டைகள் இல்லாதவர்களையும், ஹெல்மெட் அணியாதவர்களையும், போதையில் வந்தவர்களை யும் திருப்பி அனுப்பினர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், கிழக்கு கடற்கரை சாலை யில் ஏராளமானோர் பட்டாசு வெடித்து சாலையில் செல்வோருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினர். மேலும், ஏராளமான தனியார் ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.(தி)




